யாழிலிருந்து சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை ஆரம்பம்
யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று (24.04.2026) அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்த யாத்திரையில், சுமார் 60 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், சிவபெருமானின் திருவுருவச் சிலையை வாகன ஊர்தியில் தாங்கியவாறு யாத்திரிகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர்.
இன்று மாலை நகர் வலமாக வருகை தந்த யாத்திரிகர்கள், சிவபுராணம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடியவாறு சிவனொளிபாதமலையை நோக்கித் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
இந்த ஆன்மீகப் பயணத்துக்கு மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளது.
நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் இந்தப் பாதயாத்திரை மரபு, வடபுலத்து மக்களுக்கும் மலையக மக்களுக்கும் இடையிலான ஆன்மீகப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.