அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்
இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ள நிலையில், ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோர் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாக 'மெஹர்' (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரானியத் தரப்பும் தற்போது புறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய முக்கிய முரண்பாடுகள் காரணமாக எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ள நிலையில், இப்பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.