மகோற்சவ பெருவிழாவிற்கு தயாராகும் நல்லூர் கந்தன்; எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை செங்குந்தர் பரம்பரையினரால் சம்பிரதாயப்பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது காலம்காலமாக இடம்பெற்றுவரும் பாரம்பரிய வழக்கமாகும்.
அதன்படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை மாட்டுவண்டிலில் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு, காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை சென்றடைந்தது.
இதன்போது ஆலயத்தின் வெளிவீதி உலாச் சென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாளை காலை பத்து மணிக்கு ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



