வெடிப் பொருட்களுடன் சிக்கிய மீனவர்கள்!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வெளிக்கள மீன்பிடி படகு ஒன்றில் டைனமற் வெடிப் பொருட்களுடன் சென்ற மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மன்னார் தென்கடல் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மன்னார் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து மன்னார் தென் கடல் பரப்பில் ஏழு மீனவர்கள் வெளிக்களப் படகு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
வங்காலை பிரதேச கடற்படையினர் படகை சோதனையிட்டபோது, சட்டவிரோத முறையில் மீன்பிடிக்கு பாவிக்கப்படும் டைனமற் வெடிப் பொருட்கள் காணப்பட்டதால் படகுடன் ஏழு மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களான மீனவர்களுடன் படகையும் மற்றும் சான்றுப் பொருட்களையும் மன்னார் கடற்தொழில் திணைக்களம் பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளது.
மன்னார் பொலிஸார் சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.