கற்பிட்டியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு
கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், கடலில் வலையை வீசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனசவிபுர கடற்கரை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (24) காலை குறித்த மீனவர் மேலும் சில மீனவர்களுடன் இணைந்து, மீன்பிடி படகு ஒன்றில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகள்
இதன்போது அம்மீனவர் மீன்களைப் பிடிப்பதற்கு வலை வீசிக்கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது விரைந்து செயற்பட்ட சக மீனவர்கள் அவரை மீட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த மீனவர் 56 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.