வடக்கில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி!
வட மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
அதன்படி வட மாகாணத்தில் மூன்றாவது அலகாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள போதனா மருத்துவனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்பட சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு முதல் கட்டமாக மூன்றாவது அலகு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படவுள்ளது.
மேலும் அடுத்த கட்டமாக ஏனைய துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.