தமிழர்களின் நகைகள் எங்கே? உகண்டாவிலா...சிறிதரன் எம்பி காரசாரம்!
இறுதி யுத்தத்தின் போது வன்னி வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுக்கு என்ன நடந்தது என சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (9) நடைபெற்ற நிதி தூய்தாக்கல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"யுத்த காலத்தில் தமிழர்கள் தங்கள் விவசாயத் தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வன்னி வைப்பகங்களில் பெருமளவிலான நகைகளை அடகு வைத்திருந்தனர்.
இறுதி யுத்தத்தின் போது, இந்த நகைகள் அடங்கிய கொள்கலன்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினர் பொறுப்பேற்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பலமுறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சிறிதரன் எம்பி சுட்டிக்காட்டினார்.