ஒன்லைன் விசா முறை தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் நாளை (05) முடிவு எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இ-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்ததுள்ளது.
இதன்படி, ஓகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒன்லைன் முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக வீசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.