ஃபெங்கல் புயல் குறித்து மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கை மற்றும் இந்தியாவை புரட்டிபோட்டிக்கொண்டிருக்கும் ஃபெங்கல் புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றையதினம் (30-11-2024) பிற்பகல் 5 மணிக்கு குறித்த அறிவிப்பு நாளையதினம் (01-11-2024) காலை 05.00 மணிவரை அமுலில் இருக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (30-11-2024) மதியம் 12:00 மணிக்கு தென்மேற்கு வங்கக் கடலிலிலிருந்து ஃபெங்கல் புயலானது, 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 420 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடக்கே சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் இருந்தது.
இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை கடக்குமென எதிர்க்கப்பட்டது.
இந்த புயல் இந்தியாவிற்குள் செல்லும்போது படிப்படியாக வலுவிழந்து நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் மேலும் குறைவடையும்.
வட மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.