இறுதி சடங்கில் ஆணாக மாறிய பெண் சடலம் ; அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் ஆண் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பதுளை, அல்பொத்த, கொலனிய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஜூபைதா உம்மா என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது சடலத்திற்குப் பதிலாக அடையாளம் தெரியாத ஒரு ஆண் நபரின் சடலம் வைத்தியசாலை நிர்வாகத்தால் உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள், இறுதிச் சடங்குகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னர், இஸ்லாமிய மத மரபுகளின் அடிப்படையில் முகத்தைப் பார்வையிட்டபோது, அது பெண்ணின் சடலம் அல்லாது ஆண் நபரின் சடலம் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குறித்த ஆண் சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், உயிரிழந்த மூதாட்டியின் சரியான சடலம் அடையாளம் காணப்பட்டு, அதே தினத்தில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கருத்து கேட்டபோது, “சடலங்களை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்வது உறவினர்களின் பொறுப்பாகும்” என பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.