பரீட்சைக்கு தோற்றும் மாணவனை சிறுநீரில் இருந்து இரத்தம் வெளியேறும் வரை தாக்கிய சக மாணவர்கள்; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்
பாணந்துறையில் பாடசாலையொன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அம் மாணவனுக்கு வயிற்றின் கீழ் உதைத்தமையினால் சிறுநீரில் இருந்து இரத்தம் வெளியேறியதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தாக்குதல் நடத்திய ஐந்து மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன்
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கு விடையளித்துள்ளார்.
அத்தோடு முதல் வினாத்தாளுக்கு முன்னதாக சுமார் இரு மணி நேரம் ஓய்வும் எடுத்துள்ளார்.
அச் சமயம் அவர் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 மாணவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன்
தாக்குதலின் பின்னர் மாணவர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு அவரது சிறுநீர் பாதையில் இருந்து இரத்தம் வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் ஒருவர் களுத்துறை வலய கல்வி அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
மாணவர் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு முதல் வினாத்தாளுக்கு பதில் அளித்ததாகவும், தேர்வு முடிந்ததும் மாணவன் தனது தந்தையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முறைப்பாடு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய தலைமையக காவல்துறை பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.