சொந்த மகள்களையே சீரழித்த தந்தை, அதிரடி காட்டிய நீதிமன்றம் ; தமிழர் பகுதியை உறைய வைத்த சம்பவம்
தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒரு மகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு பதிவு
இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார்.
அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.