புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தை!
புத்தளம் - மன்னார் வீதியின் 2ம் கட்டைப் பகுதியில் உள்ள உடையார் குளத்தில் ஆண் ஒருவர் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று காலை (02-02-2023) வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் திரும்பி வீடு வருகைத் தராமல் இருந்தமையின் காரணத்தினால் சடலமாக மீட்கப்பட்டவரின் பிள்ளைகள் அவரது உறவினர்களிடம் இன்று காலை (03-02-2023) தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உறவினர்கள் குறித்த நபரை இன்று காலையில் இருந்து தேடும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர் அப்பகுதியிலுள்ள குளத்திற்கு அருகில் அவரது உடைகள் மற்றும் செருப்பு இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஒன்றினைந்து குளத்தில் இரங்கி தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது காணாமல்போன குறித்த நபர் இன்று நண்பகல் 12 மணியளவில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு புத்தளத்திற்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் சென்று சடலமாக மீட்கப்பட்ட நபரை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவரின் உறவினர்கள் இது கொலையாக இருக்கலாமென சந்தேகிப்பதாகத் தெரிவித்து திடீர் மரண விசாரானை அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

உறவினர்களின் முறைப்பாடிற்கமைய நீதவான் முன்னிலையில் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 49 வயதுடைய மொஹமட் சுஹைல் என்ற 5 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.