சிறைச்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் கைதிகள் இருவருக்கு காயம்
பத்தேகமவிலிருந்து காலி நோக்கி பயணித்த சிறைச்சாலை பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாகொட பொலிஸ் பிரிவில் உடுகம-காலி பிரதான வீதியில் கெப்பெட்டியாகொட பகுதியில் இன்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட இரண்டு பெண் சந்தேக நபர்கள், பேருந்தின் சாரதி மற்றும் மற்றொரு சிறைச்சாலை அதிகாரி காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 33 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண் சந்தேக நபர்கள் காயமடைந்தனர்.
உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்றுவிட்டு, பின்னர் மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை நாகொட பத்தேகம வழியாக காலி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோதே பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.