தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய குடும்பம் பொலிஸில் சரண்
தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளடங்களாக நான்கு பேர் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (14) இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்கு வந்தவர்களை கடற்படையினர் அல்லது பொலிஸார் கண்டு கொள்ளாத போதும் தாமாக அவர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நால்வரையும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.