புத்தளத்தில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
புத்தளத்தில் உள்ள பகுதியொன்றில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மஹகும்புக்கடவல, ஹோம்ப கஸ்வெவ பகுதியில் நேற்றையதினம் (13-04-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய லேன்ந்துவாகே விமல் சோமஸ்ரீ எனும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மஹகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், மின்னல் தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.
மேலும், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட திடீர் மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.