விபரீத முடிவை எடுத்த குடும்பஸ்தர்... வேப்ப மர உச்சியில் இருந்து சடலமாக மீட்பு!
புத்தளம் பகுதியில் வேப்ப மரத்தில் தவறான முடிவெடுத்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றையதினம் (05-05-2024) மாலை ஆண்டிகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் உள்ள 25 அடி உயரம் கொண்ட பாரிய வேம்பு மரத்தின் மீது ஏறிய நபர், அந்த மரக்கொப்பொன்றில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதுபற்றி பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மஹாகும்புக்கடவல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, குறித்த நபர் தூக்கிட்டதன் காரணமாக கழுத்து இறுகியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.