இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளாக வேடமணிந்து திருட்டில் ஈடுபட்ட 10 பேர்!
ஹொரணை, பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து பல பகுதிகளில் பணம் மற்றும் சொத்துக்களை திருடிய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மில்லனிய, கஹதுடுவ, அனுகுருவாதொட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஹொரணை பொக்குனுவிட்ட பிரதேசத்தில் 10.18 கிராம் ஹெரோயினுடன் குழுவின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் மூலம் ஏனைய ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எஞ்சிய சந்தேக நபர்களில் ஒரு சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 02 முச்சக்கர வண்டிகள், 06 மோட்டார் சைக்கிள்கள், 03 தங்க கட்டிகள், 02 வாள்கள், ஒரு கத்தி, மற்றும் 'பொலிஸ்' என்ற அச்சிடப்பட்ட பல ஜாக்கெட்டுகள் மற்றும் டீ-சர்ட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.