பொது சுகாதார பரிசோதகர்களாக ஆள்மாறாட்டம் ; வர்த்தகரிடம் கைவரிசை
பொது சுகாதார பரிசோதகர்கள் என ஆள்மாறாட்டம் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வர்த்தகர்களிடம் பணம் பறித்து வந்த கும்பல் ஒன்று தொடர்டபில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்களின் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிந்த சில நபர்கள் அநுராதபுரம், எப்பாவல, தலாவ மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று சோதனையிட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
அங்கு சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக வர்த்தகர்களிடம் பணத்தைக் கோரியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் உள்ள சிசிரிவி கமரா காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, குறித்த நபர்கள் அணிந்திருந்த சீருடைகள், வைத்தியசாலையின் மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளை ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சீருடைகளைப் பயன்படுத்தியே அவர்கள் வர்த்தகர்களை ஏமாற்றியுள்ளனர்.
பல மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.