இ. போ. ச ஊழியர்களின் போலி மருத்துவச் சான்றிதழ் மோசடி ; விசாரணை ஆரம்பம்
விசேட மருத்துவ நிபுணர் ஒருவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கையொப்பத்தை போலி முறையில் பயன்படுத்தி, நோய் விடுப்புப் பெற்றுக்கொள்வதற்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கண்டி பிராந்தியத்திற்குட்பட்ட சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெல்தெனிய இலங்கை போக்குவரத்துச் சபை பணிமனையின் ஊழியர்கள் குழுவொன்று சமர்ப்பித்த மருத்துவச் சான்றிதழ்கள் குறித்து ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த போலி மருத்துவச் சான்றிதழ் மோசடி அம்பலமாகியுள்ளது.

உள்வாரி விசாரணை
இதற்கமைய, அந்த மருத்துவச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தெல்தெனிய பணிமனை முகாமையாளரால் , கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் வினவப்பட்ட போதே இந்த விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்த போலி மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மோசடியானது தெல்தெனிய பணிமனைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல எனவும், கண்டி தெற்கு பணிமனை உட்பட அப்பகுதியின் மேலும் பல பணிமனைகளிலும் இவ்வாறான போலிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கண்டி பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்அங்க குறிப்பிட்டுள்ளார்.
700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட பலர் ; உலகை அதிர வைத்த தகவல்
இது தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையினால் உள்வாரி விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து தெல்தெனிய பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.