நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தால் மனநலத்துக்கும் பாதிப்பு ; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை மனிதர்களின் உடல்நலத்தை மட்டுமன்றி, மனநலத்தையும் பாரதூரமாகப் பாதிக்கக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜேபண்டார எச்சரித்துள்ளார்.
மத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் வெப்பத்திற்குப் பழகியிருந்தாலும், இயல்புக்கு மாறான அதிக வெப்பநிலை மன அழுத்தம், பதற்றம் (Anxiety), மனச்சோர்வு மற்றும் அமைதியற்ற நிலையைத் தூண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெப்பம் உடலின் வேதியியல் சமநிலையைப் பாதிப்பதன் மூலம் தூக்கம், ஞாபகசக்தி மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இந்த வெப்பத்தினால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள்,நீண்டகாலமாக மருந்து உட்கொள்பவர்கள்,ஞாபக மறதி நோய் (Dementia) உள்ள முதியவர்கள், வெப்பமான காலப்பகுதியில் மது அருந்துபவர்கள் ஆகியோர் அதிக பாதிப்புக்குள்ளாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிச்சல் அடைதல், முரட்டுத்தனமான நடத்தை, பதற்றம் மற்றும் மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஆகியவை வெப்பத்தினால் மனநலம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
வெப்பத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க மருத்துவர் விந்தியா விஜேபண்டார பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சமூக வலைதளப் பயன்பாட்டைக் குறைத்து தியானம், இசை கேட்டல் மற்றும் யோகா போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுதல்.
உள்ளகப் பயிற்சிகள் (Indoor exercises) மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை. மின்விசிறி அல்லது குளிரூட்டிகளைப் பயன்படுத்துதல். முறையான அன்றாடத் திட்டத்தைப் பின்பற்றுதல். முறையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் மூலம் கடும் வெப்பக் காலத்திலும் மனநலத்தைப் பாதுகாக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.