கடலுாரில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி
தமிழகத்தின் கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சீமெந்து, வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
கடலுார் துறைமுகம் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி
குறிப்பாக, பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும், 10ம் திகதி வெங்காயம் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சரக்கு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடலுார் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள், மிதவைகள் கையாள்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், சுங்கம், குடிவரவு குடியகல்வு, சுகாதாரத்துறை ஆகிய பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை முன்னரே கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளன.
எனினும் 2002க்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பின், சாகர் மாலா திட்டத்தில் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயார் நிலையில் உள்ளது.
. 'கடலுார் துறைமுகம் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என, கடலுார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.