காலி சிறையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம் ; பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல்
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
வீடு உடைப்பு மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளுக்காக குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை கைதிகளின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் பரிசோதிக்கப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் சிறைச்சாலையின் பாதுகாப்பு மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மதில் மீது ஏறி தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.