எலோன் மஸ்க்கின் இலங்கை பணிகள் இறுதிக் கட்டத்தில்
பில்லியனர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் பணிகளானது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இதற்கு தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்களும் ஒழுங்குமுறை செயல்முறைகளும் இப்போது நிறைவடைந்துள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் அதன் செயல்பாட்டுத் துவக்கத்தைத் தொடர ஸ்டார்லிங்கிலிருந்து இறுதி கட்ட நடவடிக்கைக்காக அரசாங்கம் காத்திருக்கிறது என்றும், அந்த பணிகள் நிறைவு பெற்றதும் சேவைகள் தாமதமின்றி தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவும், அமெரிக்க வெளிவிவகாரத் துறையின் சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளரான அமெரிக்க தூதர் ஸ்டீபன் லாங்கும் கலந்து கொண்டனர்.
கூகுள் மற்றும் மெட்டா போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவு, உள்ளூர் தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் செயற்கை நுண்ணறவு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பரந்த டிஜிட்டல் ஒத்துழைப்பையும் இந்த சந்திப்பு உள்ளடக்கியது.