வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
நாட்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யாவிட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சதின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சார கட்டண அதிகரிப்பால் தமது தொழிற்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் 36 சதவீத வருமான வரியும், 15 சதவீத வற் வரியும் செலுத்தப்பட வேண்டும்.
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தால், நுகர்வோர் கொள்வனவு குறைவடையும். இதனால் தமது தொழிற்துறை மேலும் சிக்கலை எதிர்நோக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையினை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்தும் பேணுவதானால், அரசாங்கத்தின் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் வரிக்கொள்கை தீர்மானங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என என் கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.