ஓய்வுபெற்ற இராணுவ வீரருக்கு அதிகாரி செய்த மோசமான செயல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அனுராதபுரம் - பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் தர இராணுவ வீரர் ஒருவர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரிடம் 129,600 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வினையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே மேற்படு சந்தேகநபரான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை
ஓய்வுபெற்ற இராணுவ வீரரான முறைப்பாட்டாளர் பெற்றுக்கொண்ட கடனைத் தீர்க்க உதவுவதாகக் கூறி, அவரிடமிருந்து கடன் விபரங்களைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், 25 இலட்சம் ரூபா நிதியுதவியைப் பெற்றுத் தருவதாகப் வாக்குறுதியளித்துள்ளார்.
இதற்காக மூன்று சந்தர்ப்பங்களில் 129,600 ரூபாவை இலஞ்சமாக மக்கள் வங்கி கணக்கொன்றில் வைப்புச் செய்யுமாறு கோரி அதனைப் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஆவணக் கட்டணம் எனக் கூறி மேலும் 13,457 ரூபாவை அதே கணக்கில் வைப்புச் செய்யுமாறு கோரிய போதே, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.