நிலுவைத் தொகை செலுத்தியும் மீள வழங்கப்படாத மின் இணைப்பு: பாடசாலை நிர்வாகம் குற்றச்சாட்டு
மன்னார் - மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்.சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் நிலுவைத் தொகையினை செலுத்தாமையினால் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டிருந்தது.
முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்களாகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாடசாலையின் மின் கட்டணம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் காணப்பட்ட நிலையில், அதனை செலுத்தாத காரணத்தினால் மடு மற்றும் வவுனியா மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் மின்சார சபை அதிகாரிகள் வருகை தந்து பாடசாலைக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் பணம் சேகரிக்கப்பட்டு பாடசாலைக்கான மின் பட்டியலில் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டது.
நிலுவைத் தொகை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் பாடசாலையில் காணப்படும் திறன் பலகைகள் செயலற்று இருப்பதோடு, நிகழ்நிலை ஊடாக செயற்படுத்தும் விடயங்கள் பூர்த்தியற்ற நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக, வவுனியா மின்சார சபையுடன் பாடசாலையின் அதிபர் தொடர்பை ஏற்படுத்தியபோது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்குகின்றோம் எனக் கூறியபோதும் இதுவரை இணைப்பை வழங்காமல் வவுனியா மின்சார சபை அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.