பிரதி சபாநாயகர் தேர்வு; சபையில் கடும் சர்ச்சை
பிரதி சபாநாயகர் தேர்வு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தற்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றுவருகின்றதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
இதனையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், அஜித் ராஜபக்சவின் பெயரை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரேரித்தார்.
இதனால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் தெரிவுசெய்யப்பட வேண்டும், மக்கள் பணம் வீண்விரயமாக்கப்படக்கூடாது என வலியுறுத்தினர்.
அத்துடன் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியாவது, இணக்கப்பாட்டுக்கு வருமாறு வலியுறுத்தினர். எனினும், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் கூறினார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.