யாழில் ஈழத்தமிழர் மகளிர் – சிறுவர் உரிமைக்காக புதிய அமைப்பு
சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 08ஆம் திகதியன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தாம் கடந்த 9 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டபோதும், தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களை ஒருங்கிணைத்து செயற்ப முடியாத அளவுக்கு அந்த அரசியல் தடையாக இருப்பதால், அதிலிருந்து விலகி, ஈழத்தமிழர் மகளிர் ,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பை உருவாக்கியுள்ளதாக வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5 திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் உறுப்பினர்கள், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஈழ தேசத்திலே பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நித்தம் நித்தம் திட்டமிட்டு நடந்தப்படும் கொடுமைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து அவர்களின் அனைத்து நலன்களிலும் அக்கறையுடன் தமது அமைப்பு செயற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.