கல்வி சீர்திருத்தத்தில் பாடம் மட்டும் இலக்கல்ல ; ஹரிணி அமரசூரிய விளக்கம்
பாடசாலையின் வகுப்பறையிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பதே தமது நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஒரு வகுப்பறையில் 50 அல்லது 60 பிள்ளைகளை வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்கவோ, பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்தவோ முடியாது எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்தார்.
இந்த சீர்திருத்தங்கள் பாடத்திட்ட மாற்றங்களை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு, நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல எனவும் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு தேசிய பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், கடந்த 16 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டங்களில் எந்தவிதமான புதுப்பிப்பும் செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் அரச ஆசிரியர் பயிலுநர்களுக்கு புதிய பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.