ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அமைச்சர் சரத் வீரசேகர வழங்கிய உறுதி!
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.
இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தியாக்கியுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் தங்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.
வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது.
இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளயில் பொலிஸார் திறம்பட செயற்படவில்லை. என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இரண்டு வருட காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களம் சிறந்த முறையில்செயற்பட்டு பல சாட்சியங்களை திரட்டியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 32 பேருக்கு எதிராக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்காக மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் பொலிஸாரின் துரிதகர செயற்பாடுகளினால் சாத்தியமானது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிச்சயம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். என்றார்.