விளம்பரத்தில் நடித்தது தப்பா? துல்கர் சல்மானுக்கு வந்த சிக்கல்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரும், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமானவரும், பிரபல நடிகர் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான், விளம்பரம் ஒன்றில் நடித்ததால தற்போது ஒரு எதிர்பாராத சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.
துல்கர் சல்மான், விளம்பரத் தூதராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பிரியாணி அரிசி நிறுவனம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், துல்கர் சல்மான், நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரியாணி சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம், சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக, துல்கர் சல்மான் விளம்பரப்படுத்தும் அந்தப் பிரபல பிரியாணி அரிசியை வாங்கியுள்ளது. அவர்கள் வாங்கிய அரிசியில் சமைக்கப்பட்ட பிரியாணியைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தக் கேட்டரிங் நிறுவனம் சம்பந்தப்பட்ட அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகிய இருவர் மீதும் நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அரிசி நிறுவனத்தின் உரிமையாளருக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பமானது , விளம்பரத் தூதர்களாக இருக்கும் பிரபலங்கள், தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து முறையாகச் சோதித்து உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாது மாபெரும் வசூலை கொடுத்த லோகா திரைப்பட்டத்திலும் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.