விமான நிலையத்தில் மது போதையில் பயணி அட்டூழியம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மது போதையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரை தாக்கியதாக கூறப்படும் பயணி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கண்டி, பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் சிங்கப்பூரிலிருந்து நேற்று (3) இரவு 09.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய பொலிஸாருக்கு தகவல்
இதன்போது சந்தேக நபர் மது போதையில் இருந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான அதிகாரிகள் இது தொடர்பில் விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (04) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.