போதைப்பொருள் பாவனை; சிங்கப்பூர் பாணியில் களமிறங்க ஆராய்வு!
போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களிற்கு சிங்கப்பூர் வழங்கும் தண்டனைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனை குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரண தண்டனை குறித்து இறுதி முடிவு
அதேசமயம் சிங்கப்பூரின் சட்டங்களை ஆராயும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன மரண தண்டனை குறித்து இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் தற்போதையை சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் சிங்கப்பூரும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றது ஆனால் அங்கு கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன.
போதைப்பொருள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான ஏனைய சட்டங்களும் உள்ள நிலையில் சிங்கப்பூர் எடுத்துள்ள ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்கின்றோம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை 1976 முதல் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு தரப்புகள் மற்றும் புலனாய்வு தரப்புகளுடன் இணைந்து போதைபொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் கரையோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருளை இடமாற்றும் பகுதியாக இந்து சமுத்திரம்
அதேசமயம் போதைப்பொருளை இடமாற்றும் பகுதியாக இந்து சமுத்திரம் மாறியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
1973ம் ஆண்டின் சட்டத்தின் கீழ் போதைப்பொருள் தொடர்பில் சிங்கப்பூரில் மரணதண்டனையும் வழங்கப்படுகின்றது.
குறிப்பிட்ட போதைப்பொருளின் வகை மற்றும் அளவு தண்டனையை தீர்மானிக்கின்றது.
அதன்படி தனிநபர் ஒருவருக்கு கசையடி தண்டனை சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனையை விதிக்க முடியும் என்பது அந்நாட்டு சட்டமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.