உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடி இடைநிறுத்தம்
வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி காலை சுமார் 10.45 மணியளவில், வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முன்பாக உத்தியோகபூர்வ சீருடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த கு அதிகாரி,

பொதுமக்களுடன் மிரட்டும் வகையில் தர்க்கம்
கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்து கொண்டு பொதுமக்களுடன் மிரட்டும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு இலங்கை பொலிஸின் மற்றும் முழு அரச சேவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்பட்டதால், நிறுவனச் சட்டத் தொகுப்பின் (Establishments Code) தொடர்புடைய விதிகளின் கீழ் அவரது கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இத்தகைய செயற்பாடுகள் ஏனைய அதிகாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும், அவரை தொடர்ந்தும் சேவையில் வைத்திருப்பது பொலிஸ் சேவையின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமிக்க பொலிஸ் சேவையை நிலைநிறுத்துவதே தமது அடிப்படை நோக்கம் என வலியுறுத்தியுள்ள இலங்கை பொலிஸ், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளின் ஒழுங்கற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் நீதியுடனும் பொறுப்புடனும் செயல்படுவதற்கு இலங்கை பொலிஸ் உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.