புர்ஜ் கலீபாவையும் விட்டு வைக்காத ட்ரோன்கள் ; ஈரானின் செயற்பாட்டால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ட்ரோன்கள் மூலம் தாக்குதல்
ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே ஈரானின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீபா (Burj Khalifa), 828 மீட்டர் (2,717 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான கட்டிடமாகும்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாஹெட் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட்டு முக்கிய இடங்களைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் ஐக்கிய அமீரகத்தின் வான் பாதுகாப்பு, ஈரானின் பல ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகளில், ஒரு ட்ரோன் புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே நெருங்கி தாக்குவது போலான காட்சிகள் வெளியாகியுள்ளதுடன், இது அச்சத்தை அதிகரிக்கிறது. இதுவரை அபுதாபியில் ஒரு உயிரிழப்பு மட்டுமே பலியாகியுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.