மதுபோதையில் காரை செலுத்தி இளைஞனை மோதிவிட்டு தப்பியோடிய வைத்தியருக்கு நேர்ந்த கதி!
மதுபோதையில் காரை செலுத்திய வைத்தியர் ஒருவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மோதிதள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து குறித்த காரையும், காரை செலுத்திய வைத்தியரையும் கைது செய்துள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (08-06-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த இளைஞன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வெள்ளை நிற கார் அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்ற நிலையில், கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காரை செலுத்தி சென்ற வைத்தியரும் கைது செய்யப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான வைத்தியர் என கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் காரினை செலுத்திய வைத்தியருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் காயமடைந்த இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.