மாத சிவராத்திரியில் இத்தனை சிறப்புகளா?
சிவராத்திரி என்பதற்கு 'சிவனுக்கு உகந்த இரவு" என்பது பொருள். சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும். சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள்.
சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி. நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது. சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும்.
இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும். சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம். மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியை மகா சிவராத்திரி என சிறப்பித்து சொல்கிறோம். அதே போல் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தசி திதியும் சிறப்புக்குரியதாகும்.
மகா சிவராத்திரிக்கு இணையான பலனை தரக் கூடியது தான் மாத சிவராத்திரியும். இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும், நன்மைகளும் கிடைக்கும். துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி சிறப்புகள்
திருவைக்காவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், ஆயுள் பலம் அதிகரிக்கும். எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை சிவ பூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
- ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது.
- சிவராத்திரி விரதம் இருந்ததால் விஷ்ணு சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
- சிவனின் மூன்று கண்களாக சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் உள்ளனர்.
- சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். - சிவராத்திரி விரதமானது வயது, இன, மத வேறுபாடுகளை கடந்த யாவரும் அனுஷ்டிக்கக் கூடியது.
- சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும்.
- இந்த புனிதமான நாளில் சிவனை வழிபடுவது மனம் மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்க உதவுகிறது. இதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சக்திகள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும்.
- மாத சிவராத்திரியில் செய்யும் பக்தியான பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் மூலம் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இது ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றி, தெய்வீக அருளைப் பெற்றுத் தரும்.