லொகான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்குமாறு வலியுறுத்து
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளதுடன் உடனடியாக அவரை ப்தவியில் இருந்து நீக்குமாறும் சஜித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சத்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது.
இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இந்த நிலையில் குறித்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை தொடர்பில் பல்லரும் கண்டனங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .