மூன்று வாரமாவது முடக்குங்கள்; ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி அரசாங்கத்திலுள்ள 10 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
குறைந்தது 03 வாரங்களுக்காவது நாட்டை முடக்கும்படி கோரி அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக அவர்கள் கோரியுள்ளதுடன் நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட, நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதெனவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணாயக்கார, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன, யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
