மின்சார கம்பியில் சிக்குண்டு பலியான குடும்பஸ்தர்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிகுட்பட்ட பன்சேனை கிராமத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பன்சேனை, நல்லதண்ணிஓடை - அடச்சகல் சந்தி பகுதியிலுள்ள விவசாய காணி ஒன்றில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் சோமசுந்தரம் சீராளசிங்கம் (வயது 39) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான விசாரணைகள்
நேற்று (03) அதிகாலை 2.00 மணியளவில் மூன்று விவசாயிகள் யானையை விரட்டுவதற்காக சென்று திரும்பி கொண்டிருக்கும் போது தனது காணியில் சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த யானை பாதுகாப்பு மின்சார கம்பியில் சிக்கியதில், ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மாதப் பகுதியில் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும் காட்டு யானை பாதுகாப்புக்காக சட்டவிரோதமான முறையில் மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.