லண்டனில் யொகானி இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு
இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்ககூடாது
இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பாரட்டுபவரை லண்டனில் மாத்திரமல்லவேறு எங்கும் இசைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்ககூடாது.
இந்த நிகழ்வை புறக்கணிக்கவேண்டும் ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வை இரத்துசெய்யவேண்டும் என தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கு ஆதரவாக குரல்கொடுப்பவருக்கு லண்டனில் நிகழ்வுகளில் ஈடுபடுவதற்கு இடமில்லை என தெரிவித்துள்ள பிரித்தானியாவின் தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் மகேஸ் அவர் எங்கள் போராளிகளை பயங்கரவாதி என அழைத்தார்,யுத்த குற்றவாளிகளிற்காக பாடினார் என தெரிவித்துள்ளார்.
யொகானி தனது தந்தையின் குற்றங்களை கண்டிக்காத வரை,யுத்த குற்றவாளிகளிற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளாதவரை, இனப்படுகொலை குறித்த விசாரணைக்கான சர்வதேச பொறிமுறைக்கு ஆதரவளிக்காதவரை அவர் இங்கு நிகழ்வுகளை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ள அரங்கின் உரிமையாளர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டவேளை யொகானியின் பின்னணி குறித்து தங்களிற்கு தெரியாது என்றும் ,தாங்கள் இந்த நிகழ்விற்கு பொறுப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறப்படுகின்றது.