பேருந்தில் பயணித்த யுவதிக்கு தொல்லை; சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஒன்றில் பயணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் கேலி செய்ததாக கூறி, சாரதியையும் நடத்துநரையும் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (20) இரவு மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்ணின் உறவினர் தாக்குதல்
பதுளையிலிருந்து புல்லுமலை ஊடாக மட்டக்களப்பு வரை போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் இ.போ.ச பஸ்ஸில் பயணித்த புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை, சாரதியும் நடத்துநரும் கேலி செய்ததாக யுவதி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், குறித்த பேருந்து மட்டக்களப்பிலிருந்து பதுளை நோக்கி மாலை 5.30 மணிக்கு சேவையை ஆரம்பித்து புல்லுமலை பகுதியிலுள்ள தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது.
அவ்வேளை தரிப்பிடத்தில் காத்திருந்த இருவர் சாரதி, நடத்துநருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டதை தொடர்ந்து, தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்ததாக தெரியவந்துள்ளது .
மேலும் கைதான இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.