tiktok காணொளியால் யாழில் புலம்பெயர் தமிழர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்ட புலம்பெயர் தமிழர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை வீடியோக்களை பதிவிட்ட வாறு பல்வேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்துள்ளார்.
பலருடனும் முரண்பாடு
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் வீடியோ பதிவிட்டவாறு , வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என அனைவருடனும் முரண்பட்டுக்கொண்டார்.
அதுபோன்று சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாம பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக காணொளி வெளியிட்டு பொலிஸாருடனும் முரண்பட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்கு சென்று மாணவிகளை காணொளி எடுத்து ரிக் ரொக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாணவிகளை காணொளி ரொக் தளத்தில் பதிவேற்றம்
இதன் போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலிஸார் அதிபரின் அனுமதியின்றி மாணவிகளை காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய , பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடனும் முரண்பட்டு அவற்றினையும் காணொளிகளாக வெளியிட்டார்.
அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கொடிகாம பொலிஸார் புலம்பெயர் தமிழரை கைது செய்தனர்.
இதனையடுத்து கைதானவரிடம் விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.