நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்
நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவர்களில் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்பேரழிவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காணாமல்போயுள்ளனர். சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் 'ரசுவா' பகுதியிலேயே இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால் வெள்ளப்பெருக்கு
எல்லைப் பகுதிக்கு அருகில் பாயும் 'போத்கோஷி' ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால், அதிக அளவிலான நீர் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணமாகும்.
அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனிப்பாறைகள் திடீரென உருகுவதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக போத்கோஷி ஆற்றை ஒட்டிய பிரதான நெடுஞ்சாலை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது.
அவசர எண்கள் அறிவிப்பு
மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண், 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுகா காவல்துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.