தீவிரமாகும் நோய் பரவல் ; 50,000 ஐக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, டெங்கு நோயினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளை விட இம்முறை டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால், பல வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை இடவசதியைத் தாண்டி அதிகரித்துள்ளதுடன், நாட்டின் 14 மாவட்டங்கள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்தச் சூழலில், டெங்கு அபாயம் அதிகம் உள்ள 600 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, இன்று (26) மூன்றாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்முறை பொசன் பண்டிகை கால தானசாலைகளுக்கு அனுமதி வழங்கும்போது விசேட நிபந்தனைகளை விதிக்கவும் சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.