நாட்டில் டெங்கு பாதிப்பு 79 ஆயிரத்தை கடந்தது ; பொதுமக்களுக்கு மீண்டும் அவசர அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு நேற்று (22) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில், அங்கு மட்டும் இதுவரை 16,676 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக, கொழும்பு மாவட்டத்தில் 15,748 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், மாத்தறை மாவட்டத்தில் 5,495 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,318 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,190 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,444 பேரும், காலி மாவட்டத்தில் 4,391 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் மட்டும் 23,641 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி, கொசு பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொடருமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.