நேற்றிரவு சுட்டுக்கொலைப்பட்ட தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் ; மேலதிக தகவல்
கொழும்பு தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (9) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல்
தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஹோட்டல் உரிமையாளர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ சூவா சமந்த” என்பவரின் நெருங்கிய சகா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ படோவிட்ட அசங்க” என்பவருக்கும் “ சூவா சமந்த” என்பவருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.