புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்த தகவல்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், இதனை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இதுவொரு நாடகம்
தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுவொரு நாடகம் எனவும் அவர் பதிலளித்தார்.
பிரபாகரனின் மனைவி மதிவதனியும், மகள் துவாரகாவும் உயிருடன் இருக்கின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக மதிவதனியின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மிக அண்மையில் குறித்த இருவரையும் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை வெளியிடுவதில் மிகவும், மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டனர்
இறுதி யுத்தத்தின் போது இருவரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை அரசாங்கத்தாலும், ஊடகங்கள் மூலமாகவும் அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , மிக அண்மையில் அவர்கள் இருவரும் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்டு, அவர்களை சந்தித்து வந்துள்ளதாக டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி கூறியுள்ளார்.
இந்த செய்தியை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியாக தெரிவிப்பதாகவும், இது கடவுள் கொடுத்த வரமாக பார்ப்பதாகவும்” அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது இதனை குறிப்பிட்டார் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.