அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் ; கனடா செல்ல பெருமளவு கடன்
அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றின் உள்ளே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட டம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண் பிசியோதெரபிஸ்ட் கனடா செல்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வங்கி மற்றும் நண்பர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் கடன்
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை வியாழக்கிழமை (18) நடைபெற்றது. அதில், அவரது மரணம் குறித்து 'திறந்த தீர்ப்பு' (Open Verdict) வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்த வெலிகம, குருந்துக்கொட்டுவ, பலல்ல முகவரியைச் சேர்ந்த ரத்நாயக்க பத்திரணகே ஷ்யாமா தர்ஷனி (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கனடா செல்வதற்காகத் திட்டமிட்டிருந்ததாகவும் அதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். எனினும் கனடா செல்லும் அவரது கனவு நிறைவேறவில்லை.

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி இந்த பிசியோதெரபிஸ்ட், தனது காதலனுடன் நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்று தங்கியுள்ளார் . பின்னர் காதலனை மட்டும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அந்த ஹோட்டலிலேயே அவர் தங்கியிருந்துள்ளார்.
பின்னர் அலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால், பதற்றமடைந்த காதலன் அவரைத் தேடி ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், அதை உறுதிப்படுத்த இதுவரை எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேசயம் மென்பொருள் பொறியாளரான அவரது காதலன் தற்போது தலைமறைவாக உள்ளார்.
அவரைத் தேடி நுவரெலியா மற்றும் தெல்தெனிய பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் மரணம் கொலைதானா அல்லது தற்கொலையா என்பது குறித்து இன்னும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
அவர் தங்கியிருந்த ஹோட்டலில், அவரது காதலன் அல்லது வேறு யாரோ அவரைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவாகியுள்ளன. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
சம்பவம் குறித்து தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜயதிலக, சடலம் இருந்த இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்தெனிய வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.